0
இளையராஜா இசையில் இதுவரை எண்ணற்ற கவிஞர்களும், பாடலாசிரியர்களும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன், மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன் உள்ளிட்ட பலர் அவருடைய இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், தேசிய விருது பெற்ற பாடலாசிரியரான பா.விஜய் இதுவரை இளையராஜா இசையில் ஒரு பாடலைக் கூட எழுதியதில்லை.

பாக்யராஜால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்ட பா.விஜய், பல ஹிட்டான பாடல்களை எழுதியிருக்கிறார். 2005ம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராப்' படத்திற்காக எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார். ஏ.ஆர்.ரகுமான், யுவன்ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியிருந்தாலும் இளையராஜா இசையில் இதுவரை ஒரு படத்தில் கூட அவர் பாடலை எழுதவில்லை.

அந்த ஆசை இப்போது விஜய்க்கு நிறைவேறிவிட்டது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'ருத்ரமாதேவி' படத்திற்காக இளையராஜா இசையில் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். பாடல் பதிவின் போது இளையராஜாவுடன் இருந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. 

Post a Comment

 
Top